*த.அஜந்தகுமாரின் 'தனித்துத் தெரியும் திசை' ஆய்வு நூல் புதியதரிசனம் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டுள்ளது *த.அஜந்தகுமாரின் 'ஓரு சோம்பேறியின் கடல்' கவிதை நூல் அம்பலம் குழுமத்தால் வெளியிடப்பட்டுள்ளது *நான் அவளுக்கொரு கடலைப் பரிசளித்தேன் என்ற கவிதைத் தொகுதி விரைவில் உங்கள் கைகளில்*

சனி, 16 ஜனவரி, 2010

ஒளிப்பிழம்பை வினாவுதல்




---த. அஜந்தகுமார்

1.
கேட்கலையோ உலகீரே
என் விசும்பல்
மண் பிளந்து விண் எழுந்து
ஒலிக்கிறதே
கேட்கலையோ?

ஆட்காட்டி விரலுக்கு
ஆயிரம் அர்த்தங்கள்.
நீட்டாய் இருந்த விரல்
குறுகி,
நினைக்க முடியாப் புள்ளியாய்
கையோடு ஒட்டுண்டு
புழுங்கிக் குமைகிறது

போக்காட்டும் வாழ்க்கையில்
இருப்பது போதுமென்று இருந்திட்டேன்
சாக்காடு வரைதானே வில்லங்கம்!
சரி, பொறுப்போம் என்று
நாக்கைப் பல்லைக் கடித்து
நான் பொறுத்தேன்
கூக்காட்டிச் சிரிக்கிறது வாழ்க்கை
குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டுகிறது காலம்
கேட்காமல் என் மனசு
விசும்பலிடை ஏதேதோ சொல்கிறதே
ஆக்கினைதான்
என் செய்வாய் என் மனமே!

2.
ஒளிப்பிழம்பே!
சோதியாய்த் துலங்கும் அகண்டமாயினை
ஆயின்,
என்னை ஏன் இப்படிச் சோதிக்கின்றனை?
உனது சுவடுகளைத் தொடர்ந்து வந்து
உன்னைத் தேடும் மூர்க்கனாய் மாறி
முயல்கிறேன், என் கனவுகளுடன்!

ஒரு சுவட்டிற்கு அப்பாலான
உன் பெரிய்ய்ய மறுசுவட்டில்
கால் வைக்க முயன்று
நெருங்கி வர,
நான் கருகும் வாசம்
என்னையே ஓங்காளிக்க வைக்கிறது
பரவும் உஷ்ணத்தில்
பாதிமுகமே எரிந்தது போல் ..........
பிரமை!

கானல் சுவடாய்
ஒளியாய்......
நீ மாறிமாறிச் செய்யும் பராக்கில்
எலும்பாய் மாறி
என் சுயம்
அங்கு இங்கென்று
காற்றில் உலைகிறது.

உனக்கென்ன?
என்னைச் சோதிக்கும்
விளையாட்டு இதுவென்று
நீ மகிழ்வாய்!

ஏதிலியான என் ஏழ்மை கண்டு
ஒரு வெற்றிக் களிப்பில்
ஊடல் கொண்டிருந்த உன் பிராட்டியுடன் நீ
‘மொத்தி’ மகிழலாம் கலவியில் களிக்கலாம்

நான்
மனையாளை, மகவை
மண்ணில் புதைத்த துயரில்
கலங்கிக் கதறியழ

நீ
மீண்டும் மீண்டுமாய்
உன் பிராட்டியோடு முயங்கு!
நெற்றிக் கண்ணில் இருந்து
பிள்ளைகளை உற்பவி!
சுடுகாடு சென்று
எங்கள் சாம்பல்கள் எடுத்து நீறணி!
உடலம் வளர்;த்தி
எரிதழல் மூட்டிய இடத்தில்
உன் தேவர் குழாம் புடைசூழ
புதல்வர்கள் இருவர் சகிதம்
பிராட்டி சமேதனாய்
சோமபானம் பருகி மகிழ்!
ரம்பை ஊர்வசியை நடுவே சுழலவிடு!
கண்களை ஒளியாக்கு!

தம் கனவைப் புதைத்து விட்டு
மாண்ட தலைமுறையோடு
புணர்ந்து கிட!
கலவிக் களிப்பின் தத்துவத்தை
உலகுக்கு உரை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அஜந்தகுமாரின் கவிதைகள்




அஜந்தகுமார் சொற்களை நேர்த்தியாக அடுக்கிக் கட்டுகிறார். அவற்றில் தன் அனுபவங்களை உணர்வுகளைப் பொதிந்து வைக்கிறார். சொற்களின் யாசகனான அவருக்கு சொற்கள் பணிந்து வளைந்து அவரிட்டபடியே பேசுகின்றன. சொற்களின் ஊடாக உணர்வின் உச்சத்தைக் கட்டி எழுப்புகிறார். சாதாரண சொற்களின் கட்டுமானத்தில் அசாதாரண உணர்வுகளின்….. விகசிப்பு.


குப்பிழான் ஐ.சண்முகன்































































































































































































Video Post

Square Banner