*த.அஜந்தகுமாரின் 'தனித்துத் தெரியும் திசை' ஆய்வு நூல் புதியதரிசனம் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டுள்ளது *த.அஜந்தகுமாரின் 'ஓரு சோம்பேறியின் கடல்' கவிதை நூல் அம்பலம் குழுமத்தால் வெளியிடப்பட்டுள்ளது *நான் அவளுக்கொரு கடலைப் பரிசளித்தேன் என்ற கவிதைத் தொகுதி விரைவில் உங்கள் கைகளில்*

சனி, 23 ஜனவரி, 2010

அப்பாவின் சித்திரம் -


---த.அஜந்தகுமார்


மௌனத்துள் இறுகிச்
சொருகிக் கிடக்கும் உன் வாழ்வு

ஏதேதோ நினைவுகளில்
உன் உலகம் இருத்தல் கூடும்

என்னப்பா என்று ஏதும் கேட்டால்
உன்பாட்டில் மெல்லிய புன்னகை தெளித்து
விலகிச் செல்வாய்

கடவுளின் கருணையிலும்
உன்னால் நான் சந்தேகம் கொண்டேன்

உன் விரல்கள் எழுதும்
மொழிகள்
விளங்க முடியாதவையாய் மாறி வருகின்றன

உன் விழிகளின் பிரகாசம் குன்றி
வருவதை
மரணத்தின் வாசலாய் எண்ணிப் பயங்கொள்கிறாய்

எனது எந்தச் சமாதானங்களுக்குள்ளும் சிக்காது
தனித்து வருகிறாய்

கடவுளின் கருணையிலும் உன்னால்
நான் சந்தேகம் கொள்கிறேன் 23012010

சனி, 16 ஜனவரி, 2010

ஒளிப்பிழம்பை வினாவுதல்




---த. அஜந்தகுமார்

1.
கேட்கலையோ உலகீரே
என் விசும்பல்
மண் பிளந்து விண் எழுந்து
ஒலிக்கிறதே
கேட்கலையோ?

ஆட்காட்டி விரலுக்கு
ஆயிரம் அர்த்தங்கள்.
நீட்டாய் இருந்த விரல்
குறுகி,
நினைக்க முடியாப் புள்ளியாய்
கையோடு ஒட்டுண்டு
புழுங்கிக் குமைகிறது

போக்காட்டும் வாழ்க்கையில்
இருப்பது போதுமென்று இருந்திட்டேன்
சாக்காடு வரைதானே வில்லங்கம்!
சரி, பொறுப்போம் என்று
நாக்கைப் பல்லைக் கடித்து
நான் பொறுத்தேன்
கூக்காட்டிச் சிரிக்கிறது வாழ்க்கை
குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டுகிறது காலம்
கேட்காமல் என் மனசு
விசும்பலிடை ஏதேதோ சொல்கிறதே
ஆக்கினைதான்
என் செய்வாய் என் மனமே!

2.
ஒளிப்பிழம்பே!
சோதியாய்த் துலங்கும் அகண்டமாயினை
ஆயின்,
என்னை ஏன் இப்படிச் சோதிக்கின்றனை?
உனது சுவடுகளைத் தொடர்ந்து வந்து
உன்னைத் தேடும் மூர்க்கனாய் மாறி
முயல்கிறேன், என் கனவுகளுடன்!

ஒரு சுவட்டிற்கு அப்பாலான
உன் பெரிய்ய்ய மறுசுவட்டில்
கால் வைக்க முயன்று
நெருங்கி வர,
நான் கருகும் வாசம்
என்னையே ஓங்காளிக்க வைக்கிறது
பரவும் உஷ்ணத்தில்
பாதிமுகமே எரிந்தது போல் ..........
பிரமை!

கானல் சுவடாய்
ஒளியாய்......
நீ மாறிமாறிச் செய்யும் பராக்கில்
எலும்பாய் மாறி
என் சுயம்
அங்கு இங்கென்று
காற்றில் உலைகிறது.

உனக்கென்ன?
என்னைச் சோதிக்கும்
விளையாட்டு இதுவென்று
நீ மகிழ்வாய்!

ஏதிலியான என் ஏழ்மை கண்டு
ஒரு வெற்றிக் களிப்பில்
ஊடல் கொண்டிருந்த உன் பிராட்டியுடன் நீ
‘மொத்தி’ மகிழலாம் கலவியில் களிக்கலாம்

நான்
மனையாளை, மகவை
மண்ணில் புதைத்த துயரில்
கலங்கிக் கதறியழ

நீ
மீண்டும் மீண்டுமாய்
உன் பிராட்டியோடு முயங்கு!
நெற்றிக் கண்ணில் இருந்து
பிள்ளைகளை உற்பவி!
சுடுகாடு சென்று
எங்கள் சாம்பல்கள் எடுத்து நீறணி!
உடலம் வளர்;த்தி
எரிதழல் மூட்டிய இடத்தில்
உன் தேவர் குழாம் புடைசூழ
புதல்வர்கள் இருவர் சகிதம்
பிராட்டி சமேதனாய்
சோமபானம் பருகி மகிழ்!
ரம்பை ஊர்வசியை நடுவே சுழலவிடு!
கண்களை ஒளியாக்கு!

தம் கனவைப் புதைத்து விட்டு
மாண்ட தலைமுறையோடு
புணர்ந்து கிட!
கலவிக் களிப்பின் தத்துவத்தை
உலகுக்கு உரை!

ஈக்கள் கலந்த ஒரு கோப்பைத் தேநீர்



---த. அஜந்தகுமார்


நேற்று சுடப்பட்டு இறந்து போனவனின்
மூச்சின் இறுதி இழை
காற்றில் வருகிறது கலந்து.

ஈக்கள் அவன் மூக்கிலும் வாயிலும்
இரத்தம் கொட்டிய இடத்திலும்
மொய்த்துக்கிடந்து
அவனின் இறுதிச் சொற்களைத்
தம்மோடு எடுத்துச் சென்றன

யாராவது ஒருவனின்
சாப்பாட்டுக் கோப்பையில்
தேநீர்க் கோப்பையில்
மலக்குழியில்
அந்த ஈக்கள் இருக்க முயற்சித்தாலும்
இறந்தவனின் சொற்களைக் காவும் ஈக்களை
எல்லோரும் கலைத்துக் கொண்டே இருக்கிறார்கள்

கலவரம் நிறைந்திருக்கும் அவர்களின் முகத்தில்
இறந்துபோனவனின் முகவிகாரம் இறுகிக் கிடக்கிறது

நாம் எல்லோரும் அந்த ஈக்களைக்
பிடித்துக் கசக்கி
தேநீருள் போட்டு:
நுள்ளான் சாப்பிட்டால்
நூறாண்டு வாழலாம் என்பது போல்
குடிப்போம்!
குடிப்போம்!!
வாழ அதுவே வழி

புதன், 13 ஜனவரி, 2010

என்னிலிருந்து வெளியேறும் ஒருவன்

த. அஜந்தகுமார்

ழித்தாண்டவனாய்
எனக்குள் ஒருவன்
சுற்றிச் சுழற்றி
என்னை ஆட்டியபடி....

மனம் அதிர்ந்து
கண் கனிந்து
கை பதறி
கால் நடுங்கி
நான் சோர்ந்து வீழ
அவனின் ஆட்டம்
உக்கிரம் கொள்கிறது


நாயின் வாலாய்
என்னை நிமிர்த்த முடியாது
திணறித் திகைத்தபடி இ;
உக்கிரம் கொள்கிறேன்
சில கணங்களில் விழித்தபடி!


அவனின் உக்கிரம்-
எனது உக்கிரம்-
உக்கிரத்தின் உற்பவிப்பில்
அவன் வெளியேறுகிறான்

நிமிடங்கள் எரிந்து வீழ
அவன் மீன்டும் வந்து
யாதொன்றும் வாய்வாளாது
'தீதெண்று" ஏதோ என்னித் தேம்பித்திரும்பினான்

புன்னகைகளின் விஷங்கள்

த. அஜந்தகுமார்

ன்னைக் கடந்து செல்லும்
முகங்களின் புன்னகைகளை
ஏளிதில் என்னால்
நம்பிவிட முடியவில்லை
புன்னகைகளின்
பின்னால் தடவப்பட்டுள்ள
விஷங்களின் கதிர்கள்
என்னைப் பயமுறுத்துகின்றன
என் முன்னால்
பற்கள் வெள்ளையாய்ச் சிரிக்கின்றன
என் பின்னால்
அவை என்னைக் கேவலப்படுத்தி
வஞ்சகம் செய்கின்றன
எதையும் நம்பிவிடமுடியாதபடி
காலம் என்னைக்
கடந்தபடி இருக்கிறது
ஊரெல்லாம் என் கதைகளை
சொல்லித் திருப்திப்படுகின்றன வாய்கள்
வாய்களில் வழிந்தபடி இருக்கும்
விஷங்களையும் வீணீரையும்
என் கண்கள் கண்காணித்தபடியே இருக்கின்றன
யாரையும் எளிதில்நம்பமுடியாத
அபத்தம் எண்ணி
என் மனம் அழுகின்றது
என் முன்னால்
நீலம் பாரித்த ஒரு நதி
ஓடிக்கொண்டிருக்கிறது
ஏன் கண்ணீர்த்துளிகள்
நீலநதியில் சேர்கின்றன
கண்ணீர்த்துளிகள்
என்றோ ஒரு நாள்
நதியைச் சுத்திகரிக்கும்
என்று என் மனம்
நம்பியபடி இருக்கிறது.

இழை பிரிந்த மௌனங்களின் கதைச்சித்திரம்

த. அஜந்தகுமார்

முடிவற்றுத் திறக்கிறது
நமது இரகசியங்களின்
உள்ளறைகள்

ஒரு புள்ளியில் தொடங்கும்
நம் கதைச்சித்திரம்
மீண்டும் அந்தப் புள்ளியில்
கால் புதைக்கிறது

சுவாரசியங்களில்
பொழுதுகள் தின்னப்பட
நமது கதிரைகளைக்
கதைகள் நிறைக்கின்றன
காற்று கேசத்தைத் தொட்டு
வருடிச் செல்லும் உணர்வில்
தொற்றிக் கொள்ளும் சொற்கள்
இறுகக் கைபற்றி
என் முகம் பார்க்கின்றது


இழை பிரிந்த
மௌனங்களிடம்
காயங்கள் ஏதும் இருக்குமேவென்று
நான் கவலைப்பட ,
நீ சிரித்த சிரிப்பில்
மின்னல் வெட்டியது
மழை பொழிந்தது
மழை நனைத்த நிலமாய்க்
குளிர்ந்தது கால்
கைகளின் நடுக்கத்தை மறைக்க
காற்சட்டைப் பொக்கற்றுக்குள் கைநுழைத்து
வான் பார்த்தோன் பார்

ஒரு சோம்பேறியின் கடல்

த.அஜந்தகுமார்.

டற்கரை மணலுள்
புதைந்து
திமிறி நடக்கும்
கால்கள்
நீ என் கைப்பிடித்தபடி
ஓடுவது போல்
பாய்ந்து பாய்ந்து நடக்கிறாய்
நீ முன்னேயும்
கொஞ்சம் நான் பின்னேயும்
நடக்கிறோம்.

விரிந்து கிடக்கும் கடல்
வா என்று
ஓடிவந்து கால் தழுவி
நக்கி நனைக்கும் அலைகள்
நீ இப்போதென்
மார்புள் புதைந்து
உயிர் தடவுகிறாய்
நான் கடலைப்
பார்த்தபடியே இருக்கிறேன்

என் நெஞ்சுக் கூட்டுக்குள்
நொருங்கித் தூங்கும்
ஒரு கனவின் காதை
என்னைத் தட்டி
தன்னை எழுதும்படி
சொல்லிக்கொண்டிருக்க
சுரணையின்றி
கண்ணை மூடுகின்றேன்
நீ என் நெஞ்சுமயிர் எண்ணுகின்றாய்.

அஜந்தகுமாரின் கவிதைகள்




அஜந்தகுமார் சொற்களை நேர்த்தியாக அடுக்கிக் கட்டுகிறார். அவற்றில் தன் அனுபவங்களை உணர்வுகளைப் பொதிந்து வைக்கிறார். சொற்களின் யாசகனான அவருக்கு சொற்கள் பணிந்து வளைந்து அவரிட்டபடியே பேசுகின்றன. சொற்களின் ஊடாக உணர்வின் உச்சத்தைக் கட்டி எழுப்புகிறார். சாதாரண சொற்களின் கட்டுமானத்தில் அசாதாரண உணர்வுகளின்….. விகசிப்பு.


குப்பிழான் ஐ.சண்முகன்































































































































































































Video Post

Square Banner