
---த.அஜந்தகுமார்
1
பொன்வண்டு பிடிக்கவென்று
ஒதியம் மரத்தொடு பலமரங்கள்
என்னென்று தெரியாத
ஏக்கமுடன் தேடியலைந்தேன்
மின்னி நின்ற பச்சியினை
மகிழ்வோடு கைக்குள் பொத்தி
மெதுமெதுவாய்த் திறக்கையிலே
புழுத்த மணமொன்று
முகத்தில் அடித்தது
பிடித்த பீ வண்டு
பறந்து போனது
2
தீப்பெட்டியில் வளர்த்து வந்த
பொன்வண்டு
எப்படி இருக்கிறது என்று
திறந்து பார்த்தேன்
காணவில்லை
சாப்பிடப்போட்டிருந்த
கிளுவம் இலை
எனைப் பார்த்துச் சிரித்தது
தீப்பெட்டியைக் போபத்தோடு
நிலத்தில் எறிந்தேன்
3
மழையொன்று பெரிதாகப் பொழிந்து
சற்று ஓய்ந்திருந்தது
தீப்பெட்டி துளைத்துக்
கிளுவை முளைக்கத் தொடங்கியிருந்தது
வேரின்றி இலையினிலே
முளைத்து வரும் அதிசயத்தை
பார்த்தபடி நான் இருக்க
மரமாக அது வளர்ந்திற்று
4
கிளுவையிலே
பொன் வண்டிருந்து சிரித்திற்று.
பரபரப்பாய்
நான் அதனை நெருங்குகையில்
பீ வண்டின் வாசம்
என் நாசிக்குள் ஏறியது
பீ வண்டே பொன்வண்டாய்
ஆனதோர் உலகினிலே
நானென் செய்வேன்? – என்
நாசியென் செய்யும்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக