*த.அஜந்தகுமாரின் 'தனித்துத் தெரியும் திசை' ஆய்வு நூல் புதியதரிசனம் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டுள்ளது *த.அஜந்தகுமாரின் 'ஓரு சோம்பேறியின் கடல்' கவிதை நூல் அம்பலம் குழுமத்தால் வெளியிடப்பட்டுள்ளது *நான் அவளுக்கொரு கடலைப் பரிசளித்தேன் என்ற கவிதைத் தொகுதி விரைவில் உங்கள் கைகளில்*

புதன், 6 அக்டோபர், 2010

 த.அஜந்தகுமார்

அவள் என்னைத் தொடர்வதை
தாங்க முடியவில்லை
தாங்கமுடியாத வெயிலாய்
நிழல்களைத் துவம்சம் செய்யும் நீலக் கண்களுடன்
பரபரத்துத் தொடர்கிறாள்
ஒடுங்குகிறேன்
ஓடுகிறேன்
எனினும் குறுஞ்செய்தியில்
தவறிய அழைப்பில்
என்னைச் சலிப்படைய வைக்கிறாள்
தேவதைகள் பற்றிய அத்தனை கனவுகளையும்
ஏப்பம் விட்டிருந்தாள்
எனது கைபேசியை உடைத்துவிட்டேன்
யாருடனும் கதைப்பதைத் தவிர்க்கிறேன்
எனினும்
அவள் பரப்பும் கதைகளை
காதுகள் கேட்கின்றன
இரக்கமற்ற அவள்
என் மீது காதல் பொழிகிறேன் என்கிறாள்
எந்தத் தேவதைகளும் பேய்களும்
வாராது அடைக்கும் கதவு எங்குள்ளது?
அறியத் தருவீரா ?
இந்த வெயிலில் இருந்து தப்ப
குடை வேண்டும்

(இக்கவிதையில் சில திருத்தங்களுக்கு உதவிய கவிஞர் திருமாவளவனுக்கு நன்றி)

இது கவிதை அல்ல: கவலை


 த.அஜந்தகுமார்

உனது சைக்கிளைப் பற்றியே
நீ ஓயாது கேட்டுக் கொண்டிருந்தாய்
நான் எனது சைக்கிளைக் கொண்டு வந்து
உன்னருகில் விட்டேன்
நீ சைக்கிளை என் தலை கோதுவது போல்
மெதுவாகத் தடவினாய்
உன் தெரியாத கண்கள்
கோபத்தினால் அலைக் கழிந்தன

சைக்கிளைத் தள்ளிவிட்டாய்

எதுவும் செய்ய முடியாது
சைக்கிளை எடுத்துச் சென்றேன்

என்னால் உன் முன்னால்நிற்க முடியவில்லை
நான் உன் முன்னால்நிற்பதாய் நினைத்து
கைகளை வீசினாய்
ஏதேதோ வாய்மொழிகள் கோபத்தில் கத்தினாய்

என் செய்வேன் நான்
கதிரையில்

தலை குத்தி இருந்தேன்

பின் விறாந்தையில்
தூசுகள் நடுவே
சாத்தப்பட்டிருந்த
சைக்கிளைப் பார்த்தேன்
கம்பிகள் துருப் பிடித்திருந்தன
றிம்மும் ரயரும் பாவிக்க முடியாததாய்...
இருக்கை காகம் கொத்தியதைப்போல போல ஒரு தோற்றமாய்
அம்மாவுக்காய் போட்ட கரியல் யாரும் இருக்கமுடியாததாய்

ஓடித்திரிந்த சைக்கிளும்
அப்பா நீ முடங்கிய போது தானும் முடங்கிவிட்டது
இப்போது நீயும் உன் சைக்கிள் போலவே...

செவ்வாய், 5 அக்டோபர், 2010

உன் பெயரில் இப்பொழுதும் ஒரு சிலிர்ப்பு இருக்கிறது

இப்பொழுது
யோசிக்கையில்
கொஞ்சம் வெட்கம் அமர்கிறது

நீ அருகில்லாத கணத்தை யோசிக்கப் பயந்தேன்
எனினும் நீ பிரிந்தாய்
கசப்புகளின் கோப்பையோடு
கொஞ்ச நாட்கள் ....
எனினும் ஞாபகம் என்பது
கீழிறங்கிச் சென்று
ஓரடுக்கில் பதுங்கியிருக்கியிருக்கிறது
யாரும் கிளராதபோது
நல்ல பிள்ளையாய்ப் படுத்திருக்கிறது

உன் பெயரை யாரும் சொல்வதை
நான் விரும்பவில்லை
அடுக்கில் இருந்து
மேலெழும் நினைவுகளை
இப்போது  வெறுக்கிறேன்

உனது பெயரில்
இப்பொழுதும்
ஒரு சிலிர்ப்பை உணர்கிறேன்

எனினும் சிலிர்ப்பில்
எனது உடல் கனக்கிறது
நோய்களின் கூடாரமாய்
நானாகுவதாய் பிரமை சுழல்கிறது

நீ வெகு துாரத்தில் இருக்கிறாய்
என் நினைவின்றி இருக்கிறாய்

உன் பெயர்ச்சாவி
என் கதவுகள் எல்லாவற்றையும்
மளமளவென்று திறக்கிறது
தென்றல் புகுந்து வருடிய காலம் இப்போது இல்லை
உடலைச் சல்லடையிடுகிறது புயற்காற்று

எனவே அவள் பெயரை
யாரும் சொல்லற்க.....!

அஜந்தகுமாரின் கவிதைகள்




அஜந்தகுமார் சொற்களை நேர்த்தியாக அடுக்கிக் கட்டுகிறார். அவற்றில் தன் அனுபவங்களை உணர்வுகளைப் பொதிந்து வைக்கிறார். சொற்களின் யாசகனான அவருக்கு சொற்கள் பணிந்து வளைந்து அவரிட்டபடியே பேசுகின்றன. சொற்களின் ஊடாக உணர்வின் உச்சத்தைக் கட்டி எழுப்புகிறார். சாதாரண சொற்களின் கட்டுமானத்தில் அசாதாரண உணர்வுகளின்….. விகசிப்பு.


குப்பிழான் ஐ.சண்முகன்































































































































































































Video Post

Square Banner