![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtQjT4l9TrH01PT4vV9TKf1LAWm7TmivLEsDzo_cog_YeLRSwUWVIy59KGU_GOo8yBbZao9Rw4q9GJYf4CCUFp3w0lh12UpsiEx6Rx8MaAIyy7rKWCnsWxGony_E5R0SnT1fehpSFuyEc/s320/election_2010_tshirt-p235157933925392246t53h_400.jpg)
---த.அஜந்தகுமார்
என்னுடன் படித்த இரண்டு நண்பர்களின் முகங்கள்
சுவர்களில் சிரிக்கின்றன
மிக அழகான படங்கள் என்று
அவர்களிடமே சொல்லியிருந்தேன்
எனது ஊரிலும் நாலு வேட்பாளர்கள்
நாலு சின்னங்களில்!
தங்கள் வல்லபத்தை எல்லாம்
உடம்பெல்லாம் வாயாக்கி
அவர்கள் சொல்வதைக் கேட்டு
நான் ஒவ்வொரு முறையும் புல்லரித்திருக்கிறேன்
ஒவ்வொருவரிடமும்
ஒரு மந்தகாசப் புன்னகையோடு
“உம்மையன்றி வேறோர் கதியில்லை’
என்பேன்
ஒன்பது அப்பங்களையும்
தாமே தின்று ஏப்பமிடும்
அவர்களின் பெருங்கனவு நாளையுடன்
உடைந்து விடப்போகிறதே என்று மிகவும்
துக்கிக்கிறேன்
மின்னலென அவர்களிடம் பிரகாசித்த
சமூக அக்கறை
நாளையுடன் மறைந்துவிடுமே என்று
தடுமாறுகிறேன்
எனக்கு கொஞ்சக் காலமாய்
பொழுது போனதே தெரியவில்லை
பல நகைச்சுவை நிகழ்ச்சிகள்
நாளையுடன் முடிகிறது என்று
என் நாத் தழுதழுக்கிறது
எப்பொழுதுமே
தேர்தல் காலமாய் இருந்தால் எவ்வளவு
மகிழ்ச்சியாய் இருக்கும் என்று
என் மனம் சின்னக்குழந்தையாய் ஏங்குகிறது
07042010
23546